உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.
கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலஸ்தினி மன்னாரில் மூன்று இடங்களில் தங்கியிருந்த பின்னர் புத்தளத்திற்கு சென்று அங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையிலேயே இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் கைதுசெய்யப்படாமல் தப்பியுள்ளவர்கள், பிணையில் விடுதலையானவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டு போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டவர்களை புலஸ்தினி சந்தித்துள்ளதாக ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.